திருப்பூர்: கே.செட்டிப்பாளையத்தில் உள்ள பின்னலாடை நிட்டிங் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருவதாக நல்லூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு பணியாற்றிய மொதிர் ரகுமான் (37), அவருடைய மனைவி அஞ்சனா அக்தர் (37) ஆகியோர் வங்கதேச நாட்டின் தலைநகரான டாக்கா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள், அய்யம்பாளையம் திருமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து, நிட்டிங் நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றியது வருவதும், முறையான ஆவணங்களின்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததும் தெரியவந்தது.
இருவரையும் நல்லூர் போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூரில் கடந்த இரண்டு மாதத்தில், முறைகேடாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.