சென்னை: உள்ளாட்சி அமைப்புகள், அரசின் பிற துறைகள் என தமிழக அரசு செலுத்த வேண்டிய மின்கட்டண பாக்கி ரூ.7,351 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மின்கட்டண பாக்கி ரூ.3,351 கோடி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளான 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 329 டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் 385 ஒன்றியங்களில் உள்ள 12,524 ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை போன்றவற்றுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல, பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குடிநீர் வாரிய அலுவலகங்கள் போன்றவற்றுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
வீடுகளை பொருத்தவரை, மின் கணக்கீடு செய்த 20 நாட்களுக்குள் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதற்கான அபராதத்தை செலுத்திய பிறகு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும். இதனால், தனிநபர்கள் குறித்த காலத்துக்குள் மின்கட்டணத்தை செலுத்துகின்றனர்.
ஆனால், உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட அரசு துறைகள், முறையாக மின்கட்டணம் செலுத்துவது இல்லை. 60 நாட்கள் அவகாசம் வழங்கியும்கூட உள்ளாட்சி அமைப்புகள் பல மாதங்களாக மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளன. குடிநீர் வாரியம் உள்ளிட்ட சில அரசு நிறுவனங்களும் மின்கட்டணத்தை முறையாக செலுத்துவது இல்லை.
குடிநீர் வாரியம், பள்ளிகள், விடுதிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு துறைகளில் 1.07 லட்சம் மின்இணைப்புகளில் ரூ.4,335 கோடி மின்கட்டண பாக்கி உள்ளது. இதில், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மட்டும் ரூ.1,900 கோடி பாக்கி வைத்துள்ளது. உள்ளாட்சி அமைப்பு, அரசின் பிற துறைகள் என தமிழக அரசு மூலம் செலுத்த வேண்டிய மின்கட்டணம் ரூ.7,351 கோடியாக உள்ளது.
கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.4,000 கோடி மின்கட்டண பாக்கி இருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.3,351 கோடி அதிகரித்துள்ளது. தமிழக மின்வாரியத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது என்பதை காரணம் காட்டிதான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.