தமிழக மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு


ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 15 பேர்களுக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜன.25-ல் கடலுக்குச் சென்ற சச்சின் என்பவரின் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, படகிலிருந்த ஜெயபால், ஏனோக், வீரபாண்டி, சுரேஷ், அந்தோணி, சூசை, சிவசங்கர், குணசேகரன், முத்து, அபிஸ்டன், சந்தோஷ், ரேமிஸ்டன், மேக்மில்லன், ஆரோக்கிய ஜோபினர், அகரின் ஆகிய 15 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

15 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் இன்று (திங்கட்கிழமை) நிறைவடைந்ததைத் தொடர்ந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 14 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 50 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறைத் தண்டனையும், விசைப்படகு ஓட்டுநர் ஜெயபால் என்பவருக்கு இலங்கை ரூ.2 கோடி அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 15 மீனவர்களுக்கும் மொத்த அபராதம் இலங்கை ரூ. 2 கோடியே 7 லட்சம், இதன் இந்திய மதிப்பு ரூ.60 லட்சத்து 48 ஆயிரம் ஆகும்.

x