சென்னை: போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு போகுவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி அதிகபட்சமாக 27 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்நடவடிக்கை போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மனநிறைவை அளிக்கவில்லை.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் 246 சதவீத அகவிலைப்படி உயர்வு பெற வேண்டிய ஓய்வூதியர்களுக்கு இப்போது 146 சதவீத அளவுக்கும், ஏழாம் ஊதியக்குழு பரிந்துரைப்படி 53 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு இப்போது 14 சதவீத அளவுக்கும் மட்டும்தான் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அதிகபட்சமாக ரூ.19,000 வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியர்களுக்கு ரூ.4,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசுத் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு முழு அளவு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு அதில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
ஆனாலும், உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் இந்த சிக்கலை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளிவைக்கலாம் என்று திமுக அரசு கருதுகிறது.ஓய்வூதியர்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டால் ஒரு லட்சம் ஓய்வூதியர் குடும்பங்களின் சாபம் திமுக அரசை வீழ்த்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.