சமூக விரோதிகளுக்கு காவல்துறையின் மீது பயமில்லாமல் போய்விட்டது - அண்ணாமலை விமர்சனம்


சென்னை: மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப, கையாலாகாத ஆட்சியை நடத்திக் கொண்டு, குற்றவாளிகள் திமுக-வினராக இருந்தால், அவர்களைக் காப்பாற்ற அரசு எந்திரத்தை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்தும் திமுக-வின் வழக்கத்தால், இன்று சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைப் படிக்கும் போது மனம் பதைபதைக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்னும் அளவுக்கு, நமது சமூகம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது.

கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி தந்த அதிர்ச்சி நீங்கும் முன்னரே, இன்று ஒரு நாள் காலையில் மட்டும், மணப்பாறையில் நான்காம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள், வேலூரில் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட அவலம், சேலத்தில், அரசுப் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர், திருப்பத்தூரில் வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை என, பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகள் வரிசையாக வருகின்றன.

எங்கு சென்று கொண்டிருக்கிறது தமிழகம் ? மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப, கையாலாகாத ஆட்சியை நடத்திக் கொண்டு, குற்றவாளிகள் திமுக-வினராக இருந்தால், அவர்களைக் காப்பாற்ற அரசு எந்திரத்தை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்தும் திமுக-வின் வழக்கத்தால், இன்று சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது. பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே ?” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

x