காஞ்சிபுரம்: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் பிப்.15-ம் தேதிவரை காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்க வந்த இளைஞர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருவதாகத் தெரிகிறது. சென்னையில் உள்ள ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு அலுவலகம் அக்னிவீர் டெக்னிக்கல் (அனைத்து ஆயுதங்கள்), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 10-வது தேர்ச்சி (அனைத்து ஆயுதங்கள்),அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 8-வது தேர்ச்சி (ஹவுஸ்கீப்பர் & மெஸ் கீப்பர்) (அனைத்து ஆயுதங்கள்),சிப்பாய் பார்மசி மற்றும் சோல்ஜர் டெக்னிக்கல் நர்சிங் அசிஸ்டென்ட் / நர்சிங் அசிஸ்டென்ட் (கால்நடை) ஆகிய பணியிடங்களில் ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆள்சேர்ப்பு பணி காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் பிப். 5-ம் தேதி தொடங்கி 15-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உட்பட 12 மாவட்டங்கள், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் காஞ்சிபுரத்தை நோக்கி ஏராளமான இளைஞர்கள் வந்துள்ளனர். அதிகாலையிலேயே அவர்களுக்கான ஓட்டம் முதலியவை ஆரம்பித்துவிடுவதால் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து அதிகாலை 12.30 மணிக்கே ஆஜராக வேண்டும் என்று உள்ளூர் போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.
ராணுவ அலுவலகம் சார்பில் அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக எந்த ஒரு தகவல் மையமும் வெளியில் அமைக்கப்படவில்லை. மேலும் இந்த முகாம் நடைபெறும் இடத்துக்குள் யாரும் செல்லமுடியாதபடி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்தினமே காஞ்சிபுரத்துக்கு வரும் இளைஞர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.