சென்னை: பொதுமக்களின் பிரச்சினைகளை போலீஸார் பரிவோடு கேட்டு தீர்த்துவைக்க வேண்டும் என, காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார். தமிழக காவல் துறையில் 10 ஆண்டுகள் மெச்சத்தகுந்த வகையில், பணிபுரிந்த போலீஸாருக்கு தமிழக முதல்வரால் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று ‘முதல்வரின் காவலர் பதக்கம்’ வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் 3,000 போலீஸாருக்கு பதக்கங்கள் வழங்க பொங்கல் தினத்தன்று அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், சென்னை பெருநகர காவல் பிரிவில் பணிபுரியும் 515 போலீஸார் மற்றும் தமிழக காவல் துறையின் இதர சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 255 போலீஸார் என மொத்தம் 770 போலீஸாருக்கு 2025-ம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் ‘காவலர் பதக்கம்’ வழங்கும் விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இவ்விழாவில், பதக்கங்களை வழங்கி சென்னை காவல் ஆணையர் அருண் பேசியதாவது: மத்திய, மாநில அரசில் பணியாற்றுபவர்களை அரசு பணியாளர்கள் என்று கூறுகிறோம். இந்த அரசு பணிகளில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. சில துறைகள் பொதுமக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும். அதில் காவல்துறை மிக முக்கியமானது. பொதுமக்களோடு மிக நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு காவல்துறையினருக்கு இருக்கிறது.
பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுடன் காவல்துறையை அணுகும் போது, போலீஸார் பரிவோடு அதனைக் கேட்டு, தங்களால் முடிந்தவரை சட்டத்துக்கு உட்பட்டு அந்த செயலை செய்து கொடுக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெறும் பாராட்டே காவல்துறைக்கு கிடைக்கும் மிக முக்கியமான பதக்கமாகும்.
சென்னை காவலில் 23,000 போலீஸார் பணிபுரிகின்றனர். இதில் சிலர் செய்யும் தவறுகள், அர்ப்பணிப்போடு பணிபுரியும் காவல்துறையினர் அனைவருக்கும் இழுக்காக அமைந்து விடுகிறது. இதை கருத்தில்கொண்டு, ஒவ்வொரு போலீஸாரும் ‘நம்மால் நமது காவல்துறைக்கு எந்த வகையிலும் இழுக்கு ஏற்படக் கூடாது’ என்று உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முதல்வரின் காவலர் பதக்கங்களை கூடுதல் காவல் ஆணையர்கள் கபில்குமார் சி.சரத்கர், கண்ணன், சுதாகர், நரேந்திரன் நாயர், ராதிகா ஆகியோரும் பகிர்ந்து வழங்கினர். மேலும், போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை காவல் ஆணையர் பெற்றுக் கொண்டார்.