சிவகங்கை காவல் நிலைத்தில் புகுந்து பெண் ஆய்வாளர் மீது விசிகவினர் தாக்குதல்: தினகரன் கடும் கண்டனம்


சென்னை: சிவகங்கை அருகே காவல் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவல் உதவியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

காவல் நிலையத்திற்குள் புகுந்து பணியில் இருக்கும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மீது நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் பணியில் ஈடுபட்டுள்ள தன் மகளுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை எனக்கூறி கதறி அழும் பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரின் தாய்க்கு காவல்துறை என்ன பதில் சொல்லப் போகிறது ?

தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக பெண் காவல் உயர் அதிகாரி ஒருவர் அளித்த புகார் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாகவே காவல் நிலையத்திற்குள் பெண் காவல் ஆய்வாளர் மீது நடைபெற்றிருக்கும் தாக்குதல் சம்பவம் தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு துளியளவும் பாதுகாப்பில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.

எனவே, சிவகங்கையில் காவல் நிலையத்திற்குள் புகுந்து பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களை காக்கும் நோக்கில் காவல் துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

x