தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது


தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம் அருகே மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

மன்னார் வளைகுடா கடற்பகுதி தலைமன்னார் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த சந்தியா சதிஷ் என்பவரது விசைப்படகை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறைப்பிடித்தனர்.

கைப்பற்றப்பட்ட விசைப்படகையும், படகிலிருந்த ஆரோக்கிய எபிரான், ஜிம்மிகாட்டர், சந்தியா டிரோன், பிரசாத், முனியசாமி, சிவா, அந்தோணி, பயாஸ் தாமஸ், ரவி சங்கர், சேசுராஜா ஆகிய 10 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் 10 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபிக், பிப். 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டார். பின்னர் தமிழக மீனவர்கள் வவுனியா சிறையில அடைக்கப்பட்டனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 8 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x