சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம், 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பலகட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதாவது 11 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹீர் ஹுசைன், போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பிய மனுவில், ‘எரிபொருள் விலையேற்றம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இதற்கு ஆணையர் அளித்த பதிலில், ‘ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றியமைப்பது தொடர்பான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை அரசு பரிசீலித்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.