சென்னை: தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கனிமவளத்துறையில் நடக்கும் நடைமுறை சிக்கல்களையும் முறைகேடுகளையும் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளையும் களைய வேண்டுமென்றால், ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் மின்னணு வழி கட்டண ரசீது முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் இந்நாள் வரையில் இந்த திட்டத்தை கனிமவளத்துறை நடைமுறைப்படுத்தவில்லை.
அனைத்து மலை மற்றும் கல்குவாரிகளிலும் 100 ரசீது பெற்றுக்கொண்டு அரசுக்கு தெரியாமல் 1,000 லோடு மலையை வெட்டி எடுக்கின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குவாரிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இதுபோன்ற முறைகேடுகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
மீண்டும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க மின்னணு வழி கட்டண ரசீது முறை மூலம் கனிமங்களை எடுக்க வேண்டும். கனிம கொள்ளையையும், கடத்தலையும் தடுத்து நிறுத்த மின்னணு வழி கட்டண ரசீது முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதோடு, இதன்மூலம் அரசுக்கு ஏற்படும் இழப்பையும் தடுத்து நிறுத்த முடியும் என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இன்னும் 2 வாரங்களுக்குள் கணினி முறையை நடைமுறைப்படுத்த, கனிமவளத்துறை ஆணையர் முன்வரவில்லை எனில், கனிமவளத்துறை அலுவலங்களில் பிற பயன்படுகளுக்காக உள்ள கணினிகளை உடைக்கும் நூதன போராட்டத்தை வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு நடத்துவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.