பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து


பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை என்று, குமரியில் நடைபெற்ற அகிலத்திரட்டு உதய தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

அய்யா வைகுண்டர் சுவாமி அருளிய ‘அகிலத் திருட்டு அம்மானை’ என்ற புனித நூல் உதய தின விழா குமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் வைகுண்டசாமி பதியில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு ஆராய்ச்சி மையக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், 108 பதிகள், தாங்கல் ஆகியவற்றிலிருந்து புனித நீர் மற்றும் திருநாமத்தைப் பெற்று, அவற்றை அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, மரக்கன்று நட்டு, அகிலத்திரட்டு உதய தின ஊர்வலத்தை ஆளுநர் தொடங்கிவைத்தார். இந்த ஊர்வலம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதிக்கு சென்றது. காவி உடை, தலைப்பாகை தரித்த அய்யாவழி பக்தர்கள் ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, சாமிதோப்பில் நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் ஆளுநர் கலந்துகொண்டு, அகிலத் திரட்டு அம்மானை நூலின் புதிய பதிப்பை வெளியிட்டார். திருஏடு பாராயணக்காரர்கள் சிவதவசி, சுதர்சனநாயகி ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்து, அய்யாவின் ஆசி பெற்றுச் சென்றேன். தற்போது 3-வது முறையாக வந்துள்ளேன். எப்போதெல்லாம் சனாதன தர்மத்துக்கு ஆபத்து ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நாராயணர் இங்கு அவதரிக்கிறார் என்பது நம்முடைய புனித நூல் கூறும் செய்தி.

உயர்வு, தாழ்வு என்பது இல்லை. அனைவரும் சமம் என்று சனாதனம் அறிவுறுத்துகிறது. சனாதன கோட்பாட்டுக்கு வெளியே யாரும் இல்லை. அதை நம்பாதவர்கள்கூட அந்தக் கோட்பாட்டின் கீழ் தான் வருகின்றனர். பிற வழிபாடுகளை இகழ்ந்து பேசுவது சனாதனத்தில் இல்லை. சனாதனம் என்பது சமத்துவம் ஆகும். பல்வேறு மொழிகள், வழிபாடுகள், உடை, உணவு முறை இருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர் என்பதே சனாதனத்தின் கோட்பாடு. இவ்வாறு ஆளுநர் பேசினார்.

ஆளுநர் வருகையையொட்டி, தென்தாமரைக்குளம் பதி மற்றும் சாமிதோப்பில் கன்னியாகுமரி எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

x