திருவள்ளூர்: கனமழையினால் பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 5,600 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ளது பிச்சாட்டூர் அணை. திருவள்ளூர் மாவட்டம்- ஊத்துக்கோட்டையிலிருந்து, சுமார் 16 கி.மீ., தொலைவில் உள்ள இந்த அணைக்கு,’ஃபெஞ்சல்’ புயலின் போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்தது. ஆகவே, அப்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பிறகு நீர் வரத்து குறைந்ததால், உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது தமிழக- ஆந்திர எல்லை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், வியாழக்கிழமை காலை பிச்சாட்டூர் அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்தது. இதனால், இன்று காலை முதல் பிச்சாட்டூர் அணையிலிருந்து உபரி நீரை திறந்து வருகின்றனர் ஆந்திர நீர் வளத் துறையினர். தொடக்கத்தில் விநாடிக்கு ஆயிரம் கன அடி என, திறக்கப்பட்டு வந்தது உபரிநீர்.
தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால், மாலை நிலவரப்படி, 281 அடி உயரம் கொண்ட பிச்சாட்டூர் அணையின் நீர் மட்டம் 280.80 அடியாக உள்ளது. ஆகவே, இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 5,600 கன அடியாக அதிகரித்துள்ளனர் ஆந்திர நீர் வளத் துறை அதிகாரிகள்.
ஆகவே ஆரணி கரையோரம் உள்ள பேரண்டூர், பேரிட்டிவாக்கம், காரணி, புதுவாயல், ஏலியம்பேடு, லட்சுமிபுரம், காட்டூர், ஆண்டார்மடம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.