நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டுமென மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் கைதான 800-க்கும் மேற்பட்டவர்கள் ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை உள்ளிட்ட நீதிமன்றங்கள் விதிக்கும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறைகளில் இருந்து வெளியே வரமுடியாமல் உள்ளனர். இதுகுறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் கிடைத்தும் தமிழகம் முழுவதும் வெளியே வரமுடியாமல் தவிக்கும் கைதிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், ‘‘தமிழகம் முழுவதும் ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகையை செலுத்த முடியாமல் 22 தண்டனை கைதிகளும், 153 விசாரணை கைதிகளும் வெளியே வரமுடியாமல் சிறைக்குள்ளேயே இருந்து வருகின்றனர். மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் உத்தரவுகள் சிறைகளுக்கு தாமதமாக அனுப்பப்படுவதும் ஒரு காரணம். மத்திய அரசின் திட்டத்தை பின்பற்றி ஏழை, எளிய கைதிகளுக்கு நிதியுதவி செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது" என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ஜாமீன் கிடைத்த 7 நாட்களில் கைதிகள் விடுதலையாவதை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கைதிகள், ஜாமீன் கிடைத்தும் சிறைகளில் இருந்து வெளியே வரமுடியாமல் உள்ளதாக கூறப்படும் நிலையில், கைதிகளின் எண்ணிக்கை, அவர்களின் பின்னணி குறித்த விவரங்களை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சேகரிக்க வேண்டும்.
அவர்களை ஜாமீனில் விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறி்த்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அரசின் உதவித்திட்டங்கள் மூலமாக பயனடைந்த கைதிகள் குறித்த விவரங்களை தமிழக அரசும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்