கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், துக்காச்சியிலுள்ள சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு உலகப் புகழ்பெற்ற யுனஸ்கோ அமைப்பால் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்துக் கோயிலான இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாகும். பின்னர், குலோத்துங்கன் சோழன் மற்றும் விக்கிரமசோழன் ஆகியோர் இக்கோயிலில் புனரமைத்தாக கல்வெட்டிலுள்ளது. இந்தக் கோயிலில் வேறு எங்கும் இல்லாத வகையில் தெற்குப் பார்த்த துர்க்கையம்மன், போர் அம்மனாக இந்தக் கோயில் வளாகத்திலேயே தனிக் கோயிலில் காட்சியளிக்கின்றாள். மேலும், இந்தக் கோயில் முழுவதுமுள்ள கட்டுமானங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சோழர் காலத்துச் சிற்பங்கள், கலை நயமிக்க சிலைகள், சரபேஸ்வரர் சிலை உள்ளிட்டவைகள் உள்ளன.
மேலும், சிறப்புப் பெற்ற இக்கோயிலின் முன்பு வேறு எங்கும் இல்லாத வகையில் மாடத்துடன் உள்ள ராஜகோபுரம் இருப்பது அரிதாகும். தென் காளத்தியாகத் திகழும் இக்கோயில் திருநாகேஸ்வரத்திலுள்ள நாகநாத சுவாமி கோயிலின் இணை கோயிலாக உள்ளது. சிறப்புப் பெற்ற இக்கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பு செய்யாததாலும், பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்து கோயில் முழுவதும் செடி, கொடிகள் மண்டி, கோயில் இருக்கும் சுவடே தெரியாத நிலையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம், உபயதாரர் மூலம், ரூ. ஐந்தரை கோடி மதிப்பில் பழங்காலத்து முறைப்படி, பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்தாண்டு செப்.3-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் பழமையான கலை நயமிக்க, அழகிய சிலைகளுடன் கூடிய, இக்கோயிலை உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமான யுனஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, யுனெஸ்கோ ஆசிய-பசிபிக் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு சிறப்பு விருது வழங்கி உள்ளது. அதில், அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் மறுமலர்ச்சி ஆகும். ஒரு காலத்தில் கைவிடப்பட்ட சமயத் தளத்திற்கு புதிய உயிர் கொடுத்துள்ளது, நவீன பாதுகாப்பு அறிவியலைப் பாரம்பரிய கட்டுமான நடைமுறைகளுடன் இணைக்கும் ஒரு இடைநிலை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில், பொறியியல் நிபுணத்துவம் மற்றும் இந்து கோயில் கட்டுபவர்களின் அறிவாற்றல், ஸ்தபதி, உள்ளூர் கைவினைஞர் மரபுகளுக்கு ஏற்ப கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் அலங்கார வேலைகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை நிறுவுவதில், இத்திட்டத்தின் கல்வியியல் நோக்கங்கள் பாராட்டுக்குரியது. அரசு மற்றும் பக்தர்களின் குறிப்பிடத்தக்க ஆதரவு இந்த வரலாற்று கோயிலின் தொடர்ச்சியை நவீன கால பக்தி சூழலில் செயல்படுத்தியுள்ளது’ என அதில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அக்கோயிலின் அறநிலையத்துறை செயல் அலுவலர் தா.உமாதேவி கூறியது, ''ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதற்காக உலகப் புகழ் பெற்ற அமைப்பான யுனஸ்கோவால் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கோயிலின் சிறப்புகள் உலகம் அறியப்படும். மேலும், இங்கு சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது'' எனத் தெரிவித்தார்.