தமிழகத்தில் 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு


கோப்புப் படம்

சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 15.91 லட்சம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்றபோதிலும், தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) ஜூன் 18-ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் 2025 ஜனவரியில் வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அக்டோபர் மாதமே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, காலி இடங்கள் எண்ணிக்கை முதல் கட்டமாக 480-ம், அடுத்த கட்டமாக 2,208-ம் என மொத்தம் 8,932 ஆக அதிகரிக்கப்பட்டது. காலி இடங்கள் அதிகரிக்கும்போது, கட்ஆஃப் மதிப்பெண் குறையும் என்பதால், தேர்வர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், குரூப்-4 தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. அதோடு, புதிதாக மேலும் 559 காலி இடங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது காலி இடங்கள் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கட்ஆஃப் மதிப்பெண் கணிசமாக குறையும்.

தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை குறிப்பிட்டு, மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சி தரவரிசை, சிறப்பு ஒதுக்கீட்டுக்கான தரவரிசை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள், உரிமை கோரல்கள், நியமன ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வாணையம் நிர்ணயிக்கும் விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள். இணையதளத்தில் இப்பட்டியல் விரைவில் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மட்டும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். தபாலில் தகவல் அனுப்பப்படாது. எனவே, தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தை தொடர்ந்து பார்த்துவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தேர்வு முடிந்து 92 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படுவது, டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

x