திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம்: விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்


ஆட்சியர் ஆய்வு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு பாலத்தின் பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என துறை சார்ந்த அலுலர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் இன்று கலந்தாலோசனை மேற்கொண்டார். இன்றைய கூட்டத்தில், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம் ஆகிய மண்டபங்களை சீர்படுத்திட பொதுப்பணித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களுக்கு ஆட்சியரால் அறிவுறுத்தபட்டது.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம், சூரியன் மறைவு ஆகியவற்றை கண்டு களிப்பதற்கு அப்பகுதிகளில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும், பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை ஏற்படுத்திடவும், கழிப்பறைகளை சுகாதாரமாக பேணிடவும் அறிவுறுத்தப்பட்டது.

கடற்கரை திரிவேணி சங்கமம் பகுதிகள், நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதிகளில் நிழற்குடைகள் அமைத்தும், குறிப்பாக, சுற்றுலா வரும் குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா, சிறுவர் பூங்கா, சுனாமி பூங்கா ஆகியவற்றினை சீரமைத்து, பொழுதுபோக்கு விளையாட்டு பொருட்கள் அமைத்து பராமரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பூங்கா பகுதிகளை வண்ணச் செடி கொடிகளால் அழகுப்படுத்திடவும், மலர் கண்காட்சிகள் நடத்திடவும் தோட்டகலைத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கன்னியாகுமரி ரவுண்டானா முதல் காந்தி மண்டபம் வரையும், ரவுண்டானா முதல் சன்செட் பாயின்ட் வரையும், ரவுண்டான முதல் சீரோ பாயின்ட் வரையும், காந்தி மண்டபம் முதல் சன்செட் பாயின்ட வரையும், ரவுண்டானா முதல் பகவதியம்மன் கோயில் வரையும், ரவுண்டானா முதல் விவேகானந்தபுரம் வரையும், விவேகானந்தபுரம் முதல் பழத்தோட்டம் வரைக்கும் எல்.இ.டி தெருவிளக்கு அமைத்தும், உயர்கோபுர விளக்குகள் அமைத்தும் சுற்றுலா தளத்தினை மெருகூட்டிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசரகால உதவிகள் குறித்த விவரங்களையும், வழிகாட்டி பதாகைகள் அமைத்திட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சுற்றுலா தளங்கள் குறித்த விவரங்களையும் கன்னியாகுமரியிலிருந்து அந்தந்த சுற்றுலா தளங்களுக்கு செல்லுவதற்கான வழித்தடம் மற்றும் பயண நேரம் குறித்தும் அறிவிப்பு பலகைகள் சுற்றுலா அலுவலகம் மற்றும் முக்கியமான இடங்களில் அமைத்திட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கன்னியாகுமரிக்குட்பட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளிலும், குப்பைகள் தேங்காத வண்ணம் அவ்வப்போது தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்திடவும், தெருநாய்களை கட்டுப்படுத்திட பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையலறைகள், பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதுகள் நீக்கி சீரமைத்திடவும், சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளை போர்கால அடிப்படையில் தரமானதாகவும், உறுதித்தன்மையுடனும் அமைத்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுற்றுலா தளத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், தங்கும் விடுதிகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் காலாவதி தேதி, தரம், அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் விவரங்களையும், தயாரிக்கப்படும் உணவுகளின் தரத்தினையும் சுகாதாரத்தினையும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து, உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி விளக்கு, கேலரி பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை கண்டு களிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள சுற்றுலா அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தினை சீரமைத்தும், துறைமுக வளாகத்தில் சுகாதாரமாக வைத்திடவும் துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள படகு அணையும் தளத்தினை ஆய்வு மேற்கொண்டதுடன், அவற்றில் சில சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, திருவள்ளுவர் சிலை-விவேகனாந்தர் பாறையை இணைக்கும் கடல்சார் கண்ணாடி கூண்டுபாலம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகள் பார்வையிட நடவடிக்கை மேற்கோள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

x