கனவில்தான் பழனிசாமி முதல்வராக முடியும்: அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் கருத்து


திருப்பத்தூர்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் சிவகங்கை மாவட்டம்திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை திமுக அரசு நிறை வேற்றவில்லை. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே அமமுகவின் நிலைப்பாடு. தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறும். மக்களவைத் தேர்தலில் ஏழைகளை ஏமாற்றி வெற்றி பெற்றதுபோல, வரும் தேர்தலில் வெற்றிபெற முடியாது. மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் போராடும் நிலையில்தான் தமிழகம் உள்ளது.

மாணவர்களே போதைப் பொருட்களைத் தயாரித்து, பயன் படுத்தும் அளவுக்கு தமிழகம் மோசமாகிவிட்டது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நடந்திருப்பதன்மூலம், அமலாக்கத் துறை தன்னிச்சையாக செயல்படுகிறது என்பதைக் காண முடிகிறது. வைத்திலிங்கம் அதை சட்டப்படி எதிர்கொண்டு, வெற்றி பெறுவார்.

பிஎஸ்என்எல் நிறுவனம் காவி மயம் என்பது எதிர்க்கட்சிகளின் புரளிதான். பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டில் கைதாகிவிடக் கூடாது என்றசுயநலத்துக்காக கள்ள கூட்டணிவைத்து, திமுகவை வெற்றியடையச் செய்கிறார். அதிமுக தொண்டர்கள் நல்ல முடிவு எடுக்காவிட்டால், 2026 தேர்தலில் அதிமுகவுக்கு பழனிசாமியே முடிவுரை எழுதிவிடுவார். பழனிசாமி இனி கனவில் மட்டும்தான் முதல்வராக முடியும். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்

x