16 மீனவர்களை உடனடியாக மீட்கக் கோரி வெளியுறவு அமைச்சருக்கு நவாஸ்கனி எம்.பி கடிதம்


புதுடெல்லி: இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் கைதாகி, 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களை மீட்டு 2 படகுகளையும் உடனடியாக மீட்கக் கோரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி.யான கே.நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து இன்று மாலை ராமநாதபுரம் எம்பியான கே.நவாஸ்கனி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: “இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நிரந்தர தீர்வு காணப்படாமல் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் என அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது ராமேஸ்வரத்தை சார்ந்த 16 மீனவர்களையும், இரண்டு மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக, இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் நவாஸ்கனி எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.

x