தீபாவளிக்காக கோவை மாநகரில் இரவு 1 மணி வரை கடைகள் இயங்க அனுமதி


கோவை ஒப்பணக்கார வீதியில் வாட்ச் டவரில் நின்றவாறு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். படம்: ஜெ.மனோகரன்.

கோவை: தீபாவளிப் பண்டிகைக்கான பொருட்களை வாங்க ஏதுவாக மாநகரில் இரவு 1 மணி வரை கடைகள் இயங்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் புதன்கிழமை (அக்.23) மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர தனியார் வியாபாரக் கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிவோரும் தங்கள் அன்றாட பணி பாதிக்காத வகையில் அலுவல் நேரம் முடிந்த பிறகு, இரவில் கடைவீதிகளுக்கு சென்று தீபாவளிப் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்கு வசதியாக கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் வியாபார நேரத்தை அதிகரிப்பது குறித்து காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை இன்று நடத்தப்பட்டது.

அதன்படி, கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபாரத் தளங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக இரவு 1 மணி வரை செயல்படத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்கள் மேற்படி கூடுதல் நேரத்தை பயன்படுத்தி வியாபாரத் தளங்களுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல தேவையான வகையில் போதிய பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x