தேனி பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை


தேனி: தேனி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்கள் உள்ளது. மேல்தளத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை (அக்.23) லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்து கதவுகள் மூடப்பட்டு, அலுவலர்களிடம் இருந்து மொபைல் போன் அணைத்து வைக்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலுவலர்களின் பீரோ, அறை உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அலுவலகத்துக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

கடந்த 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. கணக்கில் வராத பணம் புழங்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. விசாரணையின் முடிவிலே முழு விவரங்கள் தெரிய வரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறினர்.

x