தீபாவளி கூட்ட நெரிசலில் குற்றங்களை தடுக்க - ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரம்


மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட் டுள்ள சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு மையத்தை காவல் ஆணையர் அருண் நேற்று திறந்து வைத்து, ஆய்வு செய்தார். உடன் கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் , இணை ஆணையர்கள் சிபி சக்கரவர்த்தி, மகேஷ்குமார்.

சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க போலீஸார் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பதை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புத்தாடை, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்னை தி.நகர்,புரசைவாக்கம், பாரிமுனை உட்படபஜார் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக சென்னைபோலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் ஒருபகுதியாக மாம்பலம் காவல் நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதை சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று திறந்து வைத்தார். பின்னர், அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை ஆகிய 3 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளோம். கடந்த மழைமீட்பு பணிக்காக சென்னையில் 35 சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்திருந்தோம்.

அது சிறப்பாக செயல்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதேபோன்று தற்போது தீபாவளியை முன்னிட்டும் மக்களுக்கு உதவகட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளோம்.

தி.நகரில் மட்டும் 64 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றங்களைதடுக்கும் வகையில் அனைத்து குற்றவாளிகளின் தரவுகளையும் கொண்டமுகஅடையாள தொழில்நுட்பம் (எப்ஆர்எஸ்) செயலி கண்காணிப்பு கேமராக்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பழைய குற்றவாளிகள் கூட்டத்துக்குள் நுழைந்தால் அந்ததொழில்நுட்பம் எங்களுக்கு தெரிவித்துவிடும்.

மேலும் தி.நகரில் 7 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பையும் தீவிரப்படுத்திஉள்ளோம். கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலைகளில் கடைகளுக்கு வரும் பொது மக்களின் குழந்தைகளுக்கு அவர்களது பெயர்மற்றும் பெற்றோரின் செல்போன் எண்கொண்ட பிரத்யேக ‘டேக்’ (கைப்பட்டை) கையில் கட்டப்பட்டு வருகிறது.

இதுதவிர தலா 2 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தப் பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

x