ரேஷனில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்: தமிழ்நாடு தென்னை விவசாயிகள் வலியுறுத்தல் 


கும்பகோணம்: ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய வேண்டும் என பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.செல்வம் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.சி.பழனிவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், ஒரத்தநாடு என்.சுரேஷ்குமார் ஆகியோர் உரையாற்றினர். இதில், நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தென்னை சார் தொழில் வளர்ச்சிக்காக ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

தென்னையைத் தாக்கும் ஈரோ பைட், கருந்தாழை புழுக்கள், வேர்ப்புழு, வெள்ளை ஈ, கேரளா மற்றும் தஞ்சை வாடல் நோயைக் கட்டுப்படுத்த வேண்டும். நோய்களை கட்டுப்படுத்த உரிய மருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். கயிறு வாரியம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள், தரமான தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும்.

பேராவூரணி பகுதியில் கொப்பரைக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொப்பரைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்து வருடம் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் முழக்கமிட்டனர்.

x