சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் இடைநீக்கத்தில் எப்படி தலையிட முடியும்? - அறநிலைய துறைக்கு நீதிபதி கேள்வி


சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இடைநீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை எப்படி தலையிட முடியும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தர்கள் நின்று தரிசிக்க உதவியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் நடராஜ தீட்சிதர் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதர்கள் குழுஉத்தரவிட்டது. இந்த உத்தரவைஅறநிலைய துறை ரத்து செய்தது.

இதை எதிர்த்து பொது தீட்சிதர் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க பொது தீட்சிதர்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அதில் அறநிலையத்துறை தலையிட முடியாது’’ என பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘நடராஜர் கோயிலை நிர்வகிக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீட்சிதர் இடைநீக்க விவகாரத்தில் அறநிலையத்துறை எப்படி தலையிட முடியும்’’ என கேள்வி எழுப்பினார். பின்னர்,நடராஜ தீட்சிதரின் இடைநீ்க்க காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இரு வழக்குகளையும் முடித்து வைத்தார்.

அதேநேரத்தில், நடராஜர் கோயில் நிர்வாகத்தில் அறநிலையத்துறை தலையிட அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை இரு நீதிபதிகள் அமர்வின் முடிவுக்கு விட்டு விடுவதாக நீதிபதிதனது உத்தரவில் குறிப்பிட்டார்.

x