கடலூரில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு: மலர் வளையம் வைத்து அஞ்சலி 


கடலூர்: கடலூரில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஇராஜாராம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நமது நாட்டில் வீரமரணமடைந்த காவலர்களின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 ம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு காவலர்கள் உயிரிழந்தனர்.

கடல் மட்டத்திலிருந்து, 16 ஆயிரம் அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை, நினைவு கூறும் வகையில், வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஇராஜாராம் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் அமைத்துள்ள நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் சௌமியா, நாகராஜன், சண்முகவேலன், ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் விநாயகம், காவல் ஆய்வாளர்கள் செந்தில் விநாயகம், முருகேசன், அமுதா, ஊர்க்காவல்படை துணை வட்டார தளபதி கலாவதி, மாவட்ட உதவி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஆறுமுகம், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் ஞானமுருகன், பெண் காவலர் சரண்யா ஆகியோர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

பின்னர் ஆயுதப்படை காவலர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தினர்கள். இதையடுத்து போலீசார் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்கள்.

x