திருவள்ளூர் - மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுப்பு


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் அருகே மப்பேடு கிராமத்தில் ஸ்ரீ சிங்கீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் செயல் அலுவலரும், ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலின் பொறுப்பு செயல் அலுவலருமான பிரகாஷ், சமீபத்தில் கோயில் வளாகத்தில் உள்ள லாக்கர்களில் சோதனையில் ஈடுபட்டார்.

அச்சோதனையில், விஜயநகர சாம்ராஜ்யத்தின் முத்திரையை கொண்ட வளையத்தில் இணைக்கப்பட்ட இரு செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, கண்டெடுக்கப்பட்ட செப்பெடுகள் குறித்து, திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் பொ.கோ.லோகநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றார் கோயில் செயல் அலுவலர் பிரகாஷ்.

சமஸ்கிருத மொழியில், நந்தி நாகரி எழுத்து வடிவில் தகவல்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டிருந்ததால், அதன் புகைப்படங்களை கர்நாடக மாநிலம் - மைசூருவில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப்பிரிவுக்கு அனுப்பி வைத்தனர் மாவட்ட தொல்லியல் அலுவலர்.

தொடர்ந்து, செப்பேடுகளின் புகைப்படங்களை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப்பிரிவின் இயக்குநர் கே.முனிரத்தினம், “ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகள், 1,513-ம் ஆண்டு விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவராய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. பல பிராமணர்களுக்கு அரசரால் கிருஷ்ணராயபுரா என மறுபெயரிடப்பட்ட வாசலபட்டகா கிராமத்தை பரிசாக அளித்துள்ளதை இந்த செப்பெடுகள் குறிப்பிடுகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செப்பேடுகளின் முழு விபரங்களை அறிய விரைவில் இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டல கல்வெட்டுப்பிரிவினர் மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலுக்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்ய உள்ளதாக மாநில தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு செப்பேடுகள்.

x