மொழி அரசியலை இனியாவது திமுக கைவிட வேண்டும்: பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை வலியுறுத்தல்


கோவை: மொழி அரசியலை இனியாவது திமுக கைவிட வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழுக்கு திமுகவினர் மட்டுமே உரிமையானவர்கள் என்பதுபோல பேசுகின்றனர். பாஜக தமிழ்ப் பற்று இல்லாதவர்கள் என்றும் காட்ட முயற்சிக்கின்றனர். இதற்கானவெளிப்பாடுதான், பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியது. ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா என்று முதல்வர் காத்துக் கொண்டு இருக்கிறார்.

தமிழைச் சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். மற்றொரு மொழியைச் சொல்லி, தமிழை யாரும் சிறுமைப்படுத்த முடியாது. மொழி அரசியலை இனியாவது திமுக கைவிட வேண்டும்.

என்னை கூட இந்தி இசை என்று விமர்சிக்கின்றனர். தமிழ் என் உயிரில் இருக்கிறது. திமுகவினரின் குழந்தைகள் எத்தனை பேர் தமிழ் படிக்கின்றனர்? தமிழ்த்தாய் வாரம் கொண்டாடப்பட வேண்டும். அதேநேரத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தில்சில வார்த்தைகள் விடுபட்டதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. ஆனால், உள்நோக்கம் இல்லாதஒன்றை, உள்நோக்கத்துடன் செய்ததாக காட்ட முயற்சிக்கின்றனர். தெரியாமல் செய்த தவறை பெரிதாக்குகின்றனர். எதையாவது பூதாகரமாகச் செய்து, அரசியல் செய்ய பார்க்கின்றனர். இந்தஇரட்டை வேடத்தைக் கண்டிக்கிறோம்.

சனாதனத்தை எதிர்த்தவர்கள்.. துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின், தனது தவறுகளை திருத்திக் கொள்ள திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மகிழ்ச்சி.ஆந்திர மாநில துணை முதல்வர்பவன் கல்யாண் சொன்னதுபோல சனாதனத்தை எதிர்த்தவர்கள் காணாமல் போவார்கள். கோவையில் தொடர்ந்து வெடிகுண்டு புரளி வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற புரளிகளை காவல் துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

வட மாநிலத்தில் தமிழ் படிக்கின்றனர். இங்கு ஏன் இந்தியை தடுக்கின்றனர்? வளரும் குழந்தைகளுக்கு மொழிகளை கிரகித்துக் கொள்ளும் தன்மை இருக்கிறது. நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக நீட் தேர்வை குறைசொல்ல முடியாது. நீட் பயிற்சி மையங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். நீட் மையம் செல்லாமலே மாணவர்கள் தேர்வாகி இருக்கின்றனர்.

சென்னையில் சிறிய மழையை எதிர்கொண்ட பணிகளைப் பெரிதாகப் பேசுகின்றனர். தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை விடப்பட்டது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்.

ஆளுநர்களுடன், முதல்வர்கள் இணக்கமாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில், தமிழக ஆளுநரை அழைத்து என்ன பிரச்சினை என்று முதல்வர் கேட்டிருந்தால், இந்த விவகாரம் எளிதாக முடிந்து இருக்கும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்

x