தீபாவளிக்கு முன்னதாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்: முதல்வருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கடிதம்


கோப்புப்படம்

சென்னை: தீபாவளிக்கு முன்னதாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என முதல்வருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கதிரேசன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் அரசு நிறுத்திவிட்டது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியபோதும் அரசு கண்டுகொள்ளவில்லை.

இந்த விவகாரத்தில் ஓய்வூதியர் நலச் சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசு மேல்முறையீடு செய்ததால் வழக்கு நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில் நலிவடைந்து தவித்துவரும் ஓய்வூதியர்களுக்கு, வழக்கமாக 5- தேதி வழங்கப்படும் ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

x