கவரைப்பேட்டை ரயில் விபத்து எதிரொலி: தண்டவாளங்களை ஒட்டி ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டம்


சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்தை தொடர்ந்து, தமிழகத்தில் ரயில் தண்டவாளங்களை ஒட்டி போலீஸாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மாநில போலீஸை பயன்படுத்த, தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு 8.30 மணி அளவில் பாக்மதி விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் பிரதான பாதைக்கு பதிலாக லூப் லைனில் மாறி அங்கு ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் அந்த ரயிலின் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டன. 19 பேர் காயமடைந்தனர்.

விபத்து நடந்த இடத்தில், என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் அங்கிருந்த ‘ஸ்விச் பாய்ன்ட்’ போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு மாதிரி களை எடுத்துச் சென்றனர். இதற்கிடையில், தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்து. சென்னையில் தங்கி 30-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இதுதொடர்பான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதுபோல, தமிழக ரயில்வே போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மேற்பார்வையில் 3 டிஎஸ்பி-க்கள், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் 3 குழுக்களாக பிரிந்து, விசாரணை நடத்துகின்றனர். நிலைய மேலாளர், பாய்ன்ட்மென், பணியில் இருந்த ஊழியர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதற்கிடையில், தமிழகத்தில் ரயில் தண்டவாளங்களை ஒட்டி, போலீஸாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் கூறியதாவது:

இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் குறிப்பிட்ட சில போல்டுகள், நட்டுகள் கழற்றப் பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மூல மாக, விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதுபோல, விபத்து

நடைபெறாமல் தடுக்க, ரோந்து பணியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து ரோந்து மேற்கொள்ளும். இதுதவிர, மாநில போலீஸாரும் ரயில் தண்டவாளத்தை ஒட்டி ரோந்து மேற்கொள்ள அறிவுறுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

மாநில போலீஸார் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டி ரோந்து செல்வதன் மூலமாக சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும். அசம்பாவிதங்களை தடுக்க முடியும். இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்படும். ரயில்வே நிர்வாகம். மாநில காவல் துறைக்கு வேண்டுகோள் வைக்கும். இதன்மூலம். பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

x