1,000 தமிழ்த்தாய் வாழ்த்து அஞ்சல் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி திருப்பூரில் போராட்டம்!


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கும் போராட்டம் இன்று (அக்.19) நடந்தது.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்த இந்நிகழ்வில், அங்கு இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையானது. தமிழ்நாடு முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், திருப்பூரில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அஞ்சல் அட்டையில் எழுதி, இன்று மாலை (அக்.19) திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து ஆயிரம் அஞ்சல் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். இதில், திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட தலைவர் முகில் ராசு தலைமை வகித்தார். அமைப்பை சேர்ந்த பரிமளாசன், மாதவன், முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

x