தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


சென்னை: மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் 3 சதவீதம் அகவிலைப்படியை ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு: ‘நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இதனை கனிவுடன் பரிசீலித்து கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஜூலை 1 முதல் முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால், ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ. 1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியதும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் அமிர்தகுமார் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x