புதுச்சேரி: செல்வகணபதி எம்.பி-யை அரசு மருத்துவமனை ஆய்வுக்கு அழைத்த சுயேச்சை எம்எல்ஏ 


புதுச்சேரி: சுய விளம்பரத்துக்காக போராட்டம் நடத்துகிறேனா என்று கேள்வி எழுப்பி செல்வகணபதி எம்.பி-யை புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அழைத்துள்ளார்.

மாமூல் தராததால் ரவுடிகளால் தாக்கப்பட்ட நபருக்கு புதுச்சேரியில் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை சரியாக தரவில்லை என சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு போராட்டம் நடத்தினார். அதை பாஜக மாநிலத்தலைவரும் எம்.பி-யுமான செல்வகணபதி விமர்சித்துள்ளார்.

அது தொடர்பாக சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்றும், நான் சுய விளம்பரத்திற்காக போராட்டம் நடத்துவதாகவும் பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தெரிவித்துள்ளார். சரி, இப்போது தாங்கள் வேலை இல்லாமல் ஓய்வாக இருந்தால் இப்பொழுதே என்னுடன் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வாருங்கள்.

தாங்கள் வந்தால் எத்தனை நோயாளிகள் தரையில் படுத்திருக்கிறார்கள் என்பதை காண்பிக்கின்றேன். மருத்துவமனையில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது. மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா என்பதையும் காண்பிக்கின்றேன். நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் எவ்வளவு வெளியே வாங்கப்படுகிறது என்பதை நேரில் பார்க்க முடியும். தாங்கள் வருகிறீர்கள் என்றால் என்னுடைய மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

x