மகளிர் சுயஉதவி குழுவில் 35 லட்சம் பேருக்கு ரூ.18,000 கோடி கடனுதவி


சென்னை: தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு, 35 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 3.29 லட்சம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 1.44 லட்சம் என தமிழகம் முழுவதும் 4.73 லட்சம் சுயஉதவி குழுக்கள் உள்ளன. மொத்தம் 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இவற்றில் உறுப்பினராக இருந்து பயன்பெற்று வருகின்றனர்.

இந்த சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்குவதற்காக, ஒவ்வொரு நிதி ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேவைப்படும் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பு (2024-25) நிதி ஆண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு இலக்காக ரூ.35 ஆயிரம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில், அக்டோபர் மாதம் வரை மொத்தம் 2.69 லட்சம் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.18,066 கோடி வங்கி கடன்இணைப்புகள் வழங்கப்பட்டுள் ளன. இதன்மூலம் 35.03 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எஞ்சியுள்ள கடன் இணைப்புகளும் இந்த நிதி ஆண்டுமுடிவதற்குள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

x