திட்டமிட்டு செயல்பட்டால் புதுச்சேரியிலும் ஜெ. ஆட்சி: அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் பேச்சு


புதுச்சேரி: புதுச்சேரியில் திட்டமிட்டு செயல்பட்டால் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர முடியும். புதுச்சேரி அரசின் ஊழல்களை தட்டிக்கேட்கும் ஒரே கட்சி அதிமுக-தான் என்று அக்கட்சி மாநிலச் செயலர் அன்பழகன் கூறியுள்ளார்.

அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழா புதுவை மாநில அதிமுக சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மாநிலச் செயலாளர் அன்பழகன் கட்சி கொடியேற்றி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து ஏழைகளுக்கு இலவச புடவை, அன்னதானம் வழங்கி அன்பழகன் பேசியதாவது: "இந்தியாவில் நூற்றுக் கணக்கான அரசியல் கட்சிகள் உள்ளன. அதில், எந்த நோக்கத்திற்காக கட்சி துவக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை கடைசி வரை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டுமே. ஏழை மக்களுக்கு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் துணை நிற்கும் ஒரே இயக்கமாக அதிமுக உள்ளது. எம்ஜிஆர், ஜெய்லலிதா மறைவுக்குப் பிறகு இந்த இயக்கத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் அழிக்க நினைத்தவர்கள், கழகத்தை முடக்கம் செய்தவர்கள் அரசியலில் காணாமல் போய் உள்ளனர்.

துரோகிகளின் அத்தனை செயல்களையும் முறியடித்து அதிமுகவை கண் இமைபோல் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறார். புதுவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தற்போது இல்லாமல் இருக்கலாம். புதுவையை ஆளும் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறுகளையும், ஊழல் முறைகேடுகளையும் தட்டிக்கேட்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்.

வரும் 2026-ல் தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார். அதேபோல், புதுவை மாநிலத்திலும் நாம் திட்டமிட்டு செயல்பட்டால் ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர முடியும். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றித் தேர்தலாக மாற்ற அனைவரும் பாடுபடுவது அவசியம்" என்று அன்பழகன் கூறினார். இவ்விழாவில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் பாஸ்கர், ராஜாராமன், கோமளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x