அம்பத்தூர்: முன்னெச்சரிக்கையாக மழைநீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகளை வாசலில் அடுக்கிய நிறுவனங்கள்


சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நிறுவனங்களுக்குள் மழைநீர் புகாமல் இருக்க வாசலில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தும், சுமார் 2 அடியில் தடுப்பு சுவர் எழுப்பியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையின் போது சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிப்பது ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் சென்னையையே புரட்டிப் போட்டது. அப்போது தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் மழை நீர் உள்ளே புகுந்து நஷ்டத்தை ஏற்படுத்திச் சென்றது.

குறிப்பாக, நம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதில் அடங்கும். அம்பத்தூர் ஏரி நிரம்பி, அதில் இருந்து வெளியேறிய உபரி நீர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குள் புகுந்து கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

தற்போது, அந்த பாதிப்பில் இருந்து நிறுவனங்கள் மீண்டு எழுந்து வருவதற்குள், வடகிழக்கு பருவ மழை தொடங்கி இருக்கிறது. இதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பல நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும், பெருமழை பெய்தால் என்ன செய்வது என புரியாமல் தவித்து வருகின்றன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் 2 ஆயிரம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.

அம்பத்தூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், அம்பத்தூர் தொழிற்பேட்டை வழியாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரிக்குச் செல்கிறது. இந்நிலையில், அந்த உபரி நீர், கொரட்டூர் ஏரிக்குச் செல்லவது தடுக்கப்படுவதால், இந்த முறையும் தொழிற்நிறுவனங்களுக்குள் மழை நீர் புகும் அபாயம் இருப்பதாக தொழிற்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அனைத்து நிறுவனங்களும், தங்களது நிறுவன வாசலில் சுமார் 2 அடிக்கு மணல் மூட்டைகளை இப்போதே அடுக்கி வைத்து, மழை நீர் நிறுவனங்களுக்குள் புகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சில நிறுவனங்கள் மழை நீர் உள்ளே புகாமல் இருக்க மணல் மூட்டைக்கு பதிலாக, 2 அடியில் தடுப்புச் சுவர் கட்டி எழுப்பி உள்ளனர். இதுகுறித்து தொழில் நிறுவன உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், “நேற்று பெய்த மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனாலும், ஒரு சில நிறுவனங்களுக்குள் மட்டும் மழை நீர் தேங்கியது. அதை அவர்கள் மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றினர்.

வடகிழக்கு பருவ மழை தற்போது தான் தொடங்கி இருப்பதால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மழைநீர் நிறுவனங்களுக்குள் புகுந்து எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருக்கிறோம். எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டை கால்வாயில் செல்லும் மழைநீர் எவ்வித தடங்களும் இல்லாமல், கொரட்டூர் ஏரிக்குச் சென்றாலே பெரும் பாதிப்பில் இருந்து இந்த முறை நிறுவனங்கள் தப்பிக்க முடியும். தமிழக அரசும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

x