கனமழை விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்த கூடாது: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்


சென்னை: மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளை நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்அறிவறுத்தியுள்ளார். அமைச்சரின் அறிவிப்பை கண்டுகொள்ளாமல் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருவதால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம் உட்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னை, கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆன்லைன்வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தனியார் பள்ளிகள் முனைப்பு காட்டின.

இந்நிலையில் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: கனமழையால் பள்ளிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளையும் தள்ளிவைக்க வேண்டும். கனமழை மற்றும் தீவிர காற்று வீசும்சூழலில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை அனைத்து பள்ளி நிர்வாகங்களும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் உத்தரவிட்டும் அதை கண்டுகொள்ளாமல் பல பகுதிகளில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தியுள்ளன. சென்னையை அடுத்த தாம்பரம் உட்பட சில பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை திட்டமிட்டபடி நேற்று நடத்தி முடித்தன. மாணவர்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என சில பள்ளிகள்தரப்பில் அழுத்தம் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெற்றோர் மத்தியில்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பெற்றோர் கவலை தெரிவித்தனர். தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை) சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

x