தனிப்பட்ட விவரம் விவகாரம்: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி வழக்கு


சென்னை: 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சீன நிறுவனத்துக்கு விற்ற ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இணையதள பாதுகாப்பு ஆய்வாளரான ஹிமான்ஷூ பதக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “இந்தியாவில் வசிக்கும் பொதுமக்களின் அவசர மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஸ்டார் ஹெல்த் என்ற தனியார் நிறுவனம் மருத்துவ காப்பீடுகளை வழங்கி வருகிறது. தமிழகத்தில் தமிழக அரசின் ஏற்பாட்டின்பேரில் அரசு ஊழியர்களும் இந்நிறுவனத்தின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் முகவரி, மொபைல் எண், பான் எண் போன்ற தனிப்பட்ட விவரங்கள் சீன இணையதளம் ஒன்றில் கடந்த மாதம் வெளியானது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 3 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்களை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் தங்களுக்கு விற்றதாக இணையதள ஹேக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே மருத்துவ காப்பீடு செய்துள்ள கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் விவரங்களை சீன நிறுவனத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், “இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள வாடிக்கையாளர்களின் உடல்நிலை குறித்த மருத்துவம் சார்ந்த முக்கிய விவரங்களையும் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு அதிகாரி பெரிய அளவில் தொகையைப் பெற்றுக் கொண்டு அவற்றை சட்டவிரோதமாக அந்நிய நாட்டுக்கு விற்பனை செய்திருப்பது மிகப்பெரிய மோசடி. எனவே இதுதொடர்பாக உரிய புலன் விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது இணையதள நடவடிக்கைகள் மற்றும் சேவைகளைத் தொடர தடை விதிக்க வே்ணடும்” என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக மத்திய அரசின் விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து வரும் அக்.17 அன்று முடிவெடுக்கப்படும், எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

x