சேலம்: புரட்டாசி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்


சேலம்: புரட்டாசி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 16-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பயணிகள் தேவைக்கேற்ப 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு வசதியாக, சேலம் புறநகர் பேருந்து நிலையம், ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு பேருந்து நிலையங்களில் இருந்து, பயணிகள் தேவைக்கேற்ப 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் வசதிக்காக, சேலம் புறநகர், தருமபுரி மற்றும் ஓசூர் பேருந்து நிலையங்களில் இருந்து, 16-ம் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்கி 17-ம் தேதி மதியம் 2 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc bus ticket booking என்ற செல்போன் செயலி ஆகியவற்றின் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே, பயண நெரிசலை தவிர்த்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

x