மழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவுங்கள்: நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக உத்தரவு


சென்னை: பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி, அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அரசின் சார்பில் உரிய அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருந்தாலும், பொதுமக்கள் தங்கள் குறைந்தபட்ச தேவைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான மக்கள் இத்தகைய தயார்நிலையில் இருப்பின், அரசாங்கம் தனது முழு கவனத்தையும் ஏழை, எளிய மக்களின் மீது செலுத்த முடியும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனே செய்து விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். மழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது.

ஒருவேளை இயற்கை வழக்கத்துக்கு மாறாகப் பெருமழைப் பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமின்றி மழைக்காலத்தை எதிர்கொள்வோம். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் அரசுடன் துணையாக நிற்க வேண்டும் என திமுக தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஒன்றிய, பகுதி மற்றும் வட்ட செயலாளர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலேயே முழுமையாக இருந்து மக்களுக்கு உதவ வேண்டும்.

மழைக்காலத்தில் கழகத்தினர், அரசு, பொதுமக்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களும், தன்னார்வலர்களும் முன்வைக்கும் கோரிக்கைகள், மழை தொடர்பாக தெரிவிக்கும் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அது தொடர்பான மேல் நடவடிக்கைக்கு நிர்வாகிகள் வழிவகை செய்யலாம்.

மழையால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, குடிநீர், பால் தங்கள் பகுதிகளில் தடையின்றிக் கிடைக்கிறதா என்பதைக் கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மீட்புப் பணிகளை மேற்கொள்ள வரும் மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x