தாராபுரம் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து


தாராபுரம் தனியார் மருத்துவமனையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா அலுவலக சாலையில் தனியார் எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (அக்.11) மாலை சுமார் 5 மணி அளவில் வளாகத்தில் மின் கசிவின் காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த காலி அறையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உள்ளே இருந்த உள் மற்றும் புற நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து உயிருக்கு பயந்து தப்பி ஓடினர்.

தீ விபத்து குறித்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

x