தொடரும் மழை: புழல் ஏரிக்கு விநாடிக்கு 323 கன அடி நீர் வரத்து


மாதிரிப் படம்

திருவள்ளூர்: மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து புழல் ஏரிக்கு வரும் மழை நீர் வரத்து விநாடிக்கு 323 கன அடியாக இருக்கிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, சோழவரம் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. இம்மழையால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னைக் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் புழல் மற்றும் பூண்டி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஆகிய 3 ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 323 கன அடி என மழை நீர் வந்துகொண்டிருக்கிறது. அதேபோல், பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 100 கன அடி, கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 30 கன அடி என மழை நீர் வந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பூண்டி ஏரிக்கு, விநாடிக்கு 290 கன அடி வீதம் கிருஷ்ணா நீரும் வந்துக் கொண்டிருக்கிறது.

3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 2,070 மில்லியன் கன அடியாகவும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 240 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியின் நீர் இருப்பு 301 மில்லியன் கன அடியாகவும் உள்ளதாக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x