பார்சல், மெயில் சேவையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும்: அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் வலியுறுத்தல்


படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: "பார்சல் மற்றும் மெயில் சேவையை சர்வதேச தரத்துக்கு உயர்த்தினால், அதற்கேற்ப வருவாயும் அதிகரிக்க முடியும்’’ என தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் கூறியுள்ளார்.

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள ஆர்எம்எஸ் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், மெயில் தினம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மண்டல விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. ஆர்எம்எஸ் முதுநிலை கண்காணிப்பாளர் எஸ்.பாக்கியலஷ்மி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறப்பாக பணிபுரிந்த 78 ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர், விழாவில் அவர் பேசியதாவது: "தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மிகப் பெரிய ஆர்எம்எஸ் பிரிவாக, சென்னையில் உள்ள இந்த ஆர்எம்எஸ் பிரிவு திகழ்கிறது. இந்திய அஞ்சல்துறைக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், மத்திய தகவல் தொடர்புத் துறை புதிய அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா பதவி ஏற்றுள்ளார். நமது துறையின் அனைத்துப் பிரிவுகளையும் நன்கு அறிந்தவர். இதனால், அவர் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து மெயில், பார்சல் மற்றும் வருவாய் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.

அஞ்சல் துறையின் வளர்ச்சிக்கு அவர் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளார். குறிப்பாக, சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பார்சல் சேவையை மேம்படுத்த கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு மேற்கொள்ளப்படும் பார்சல் சேவையை அறிந்து கொண்டு, அதை இங்கு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், பார்சல் மற்றும் மெயில் சேவையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முடியும். சேவையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முடியவில்லை எனில் அதற்கேற்ப வருவாயும் அதிகரிக்க முடியாது. எனவே, பார்சல் மற்றும் மெயில் சேவையை உயர்த்த தற்போது சரியான தருணம் ஏற்பட்டுள்ளது" என்று மரியம்மா தாமஸ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி அஞ்சல்துறை தலைவர் (வர்த்தக மேம்பாடு) பி.நீரஜ், உதவி அஞ்சல்துறை தலைவர் (மெயில்) வி.குமார கிருஷ்ணன், அண்ணா சாலை வர்த்தக அஞ்சல் மையத்தின் அதிகாரி (பொறுப்பு) பி.வெற்றிக் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், ஏர்மெயில் பிரிப்பு மண்டல அலுவலகம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார். அதேபோல், விளையாட்டில் சிறந்து விளங்கிய அஞ்சல்துறை வீரர்களுக்கும் அவர் விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஆர்எம்எஸ் முதுநிலை கண்காணிப்பாளர் எம்.விஜயலஷ்மி, உதவி அஞ்சல்துறை தலைவர் (மெயில்) வி.குமாரகிருஷ்ணன், தேசிய அஞ்சல் பிரிப்பு மையத்தின் மேலாளர் எஸ்.சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

x