குமரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் நீக்கம்


முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம்

நாகர்கோவில் / சென்னை: கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார்.

குமரி மாவட்ட அதிமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த தளவாய்சுந்தரம், பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நெருக்கமானவர். 2016 சட்டப்பேரவை தேர்தலில் குமரி மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் அதிமுக வெற்றிபெறாத நிலையில், தளவாய்சுந்தரத்துக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற பொறுப்பை பழனிசாமி வழங்கினார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம், பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானார் தளவாய்சுந்தரம். தொடர்ந்து, கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தென் மாவட்டங்களில் பழனிசாமி பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தளவாய்சுந்தரம் ஆஜராகிவிடுவார். இந்நிலையில், அவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் கட்சி தலைமை நீக்கியிருக்கிறது.

இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், "கட்சியின்கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தஎன்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, அவர் வகித்து வரும் அமைப்புச்செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர்பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி என்ன? ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்ததே, அவரது நீக்கத்துக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் 2 இடங்களில் ஊர்வலம் நடைபெற்றது. நாகர்கோவில் அருகேயுள்ள ஈசாந்திமங்கலத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக தலைமை தெரிவித்துவரும் நிலையில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் தொடங்கிவைத்தது அதிமுகதலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவரைவிடுவித்து தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

2011 தேர்தலின்போது குமரி மாவட்டத்தில் தளவாய்சுந்தரம் போட்டியிடுவதற்கு, அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியிலிருந்து இருமுறை ஓரங்கட்டப்பட்டார். கட்சியில் பல்வேறு பின்னடைவுகளையும் அவர் சந்தித்தார். இதுபோன்ற நிலைமை தற்போதும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

"இதற்கு முன்பு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், தளவாய்சுந்தரம் கலந்துகொண்டார். அப்போது கட்சித்தலைமை எதுவும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது நடவடிக்கை எடுத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது” என்று தளவாய்சுந்தரத்தின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் தளவாய்சுந்தரம் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் பச்சைமால், எஸ்.ஏ.அசோகன் தலைமையிலும் இரு கோஷ்டிகளாக அதிமுகவினர் செயல்பட்டு வருவது, கட்சித் தலைமைக்கு நெருடலாகவே இருந்து வருகிறது. தளவாய்சுந்தரம் ஆர்எஸ்எஸ்பேரணியை தொடங்கிவைத்த விவகாரத்தை அவரது எதிர்கோஷ்டியினரே சமூக வலைதளங்களில் பரப்பி சர்ச்சையாக்கி உள்ளனர். எனவே, அதிமுக கோஷ்டி பூசலும் தளவாய்சுந்தரம் நீக்கத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக 4-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்த தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான மீனவர் வாக்குகளைப் பெறும் நோக்கில், அந்த சமூகத்தைச் சேர்ந்த பசலியான் என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்த தளவாய்சுந்தரம் பரிந்துரை செய்திருந்தார். ஆனால், தேர்தலில் அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

தளவாய்சுந்தரத்தின் அரசியல்கணக்கு தோல்வி அடைந்ததாக, எதிர்தரப்பினர் கட்சித் தலைமையிடம் புகார் தெரிவித்தனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தளவாய்சுந்தரம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனினும், பாஜகவுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்பதைமீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தும் வகையில்தான் பழனிசாமி தனக்கு நெருக்கமானவரையே கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வைத்திருப்பதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

x