விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் மரணமடைந்த விவகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


சென்னை: மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை. இறந்தநிலையில் தான் 5 பேரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்திய விமானப் படை சாகச நிகழ்ச்சியை பார்வையிட சென்ற 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிக்கு இந்திய விமானப் படைகேட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இந்திய ராணுவம் மற்றும்தமிழக அரசின் சார்பில் பல்வேறுமருத்துவக் குழுக்கள் பணியமர்த் தப்பட்டு இருந்தனர். 40 இடங்களில் ஆம்புலன்ஸ்கள், 1,000-க்கும்மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

விமான படை சார்பில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்க கோரப்பட்டிருந்த நிலையில், 1,000படுக்கைகள் தயார் நிலையில்வைக்கப்பட்டன. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 65 மருத்துவர்கள் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் குடை, தண்ணீர், கண்ணாடி, தொப்பி ஆகியவை எடுத்து வரும்படி விமானப்படை கூறியிருந்தது. வெயிலே இருக்காது. எல்லோரும் வாருங்கள் எனக் கூறவில்லை.

சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். அவ்வளவு பேர் கூடினாலும், நெரிசல், தள்ளுமுள்ளு போன்றவை ஏற்படவில்லை. அதனால், யாரும் இறக்கவில்லை என்று தமிழக அரசு சொல்லவில்லை. இறப்பு வருந்தத்தக்கது. இதில் யாரும்அரசியல் செய்ய வேண்டாம். அப்படி அரசியல் செய்ய நினைத்தால் தோல்வி அடைவார்கள். வெயில் தாக்கத்தால் பாதிப்பு மற்றும் உடலில் நீர்ச்சத்து இழப்பு போன்றவற்றால் தான் 5 பேரும் இறந்துள்ளனர். அனைவரும் இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி யாரும் இறக்கவில்லை. மேலும் 15லட்சம் மக்களுக்கும் 15 லட்சம் போலீஸாரை போட முடியுமா? தேவையான அளவு குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டி ருந்தன. பாதுகாப்பு பணியில் 7,500காவல்துறையினர் ஈடுபட்டிருந்த னர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கூறும்போது, “விமானசாகச நிகழ்ச்சிக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி சார்பில் போதிய அளவு தண்ணீர் வசதி ஏற்படுத்தி இருந்தோம். மதியம் ஒரு மணி உச்சி வெயில் என்பதால், சிலர் மயக்கமடைந்தனர்” என்றார்.

x