கரூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: லாரி ஏறியதில் பெண் உயிரிழப்பு


கரூர்: தோகைமலை அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தவறி விழுந்த பெண் மீது லாரி ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறி மாவிலிப்பட்டியைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் மனைவி மலர்க்கொடி (39). இவர்கள் இருவரும் இன்று (அக்.7-ம் தேதி) இருசக்கர வாகனத்தில் மாவிலிப்பட்டியில் இருந்து புதுக்கோட்டையில் உள்ள மலர்க்கொடியின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

தோகைமலையைச் சேர்ந்தவர்கள் கனகராஜ் (30), செல்வராஜ் (25) இவர்கள் இருவரும் தோகைமலையில் இருந்து குளித்தலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது தோகைமலை குளித்தலை சாலையில் தோகைமலை அருகே 2 இரு சக்கர வாகனங்களும் மாலை நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்த மலர்கொடி மீது அவ்வழியாக சிந்தாமணிப்பட்டிக்கு குழாய் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து மலர்க்கொடி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்த லோகநாதன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த கனகராஜ் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கும் செல்வராஜ் தோகைமலை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோகைமலை போலீஸார் லாரி ஓட்டுநரான மணப்பாறையைச் சேர்ந்த ஆல்பர்ட் சவரிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x