நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்: எம்.பி. ஆ.ராசாவிடம் கோரிக்கை!


உதகை: நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டதால், உள்ளூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என நீலகிரி அனைத்து சங்கங்களில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று அச்சங்கத்தினர் நீலகிரி எம்பி-யான ஆ.ராசாவை சந்தித்து இ-பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி முறையிட்டனர். கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும் இ-பாஸ் நடைமுறையை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

இந்நிலையில், இ-பாஸ் நடைமுறையால் உள்ளூர் பொளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என நீலகிரி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் முறையிட்டு இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் கேம்சந்த், செயலாளர் முகமது ரபீக் தலைமையில் சங்கத்தினர் இன்று நீலகிரி எம்பி ஆ.ராசாவை சந்தித்து மனு அளித்தனர்.

அதில் கூறியுள்ளதாவது: "இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை முதன்மையாக நம்பியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் நீலகிரியில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. மாவட்ட வளர்ச்சியும் தடைபடுகிறது. உள்ளூர் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த வணிகத்தில் 45 சதவீதத்துக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் இழப்பு மற்றும் சமூக பொருளாதார உறுதியற்ற தன்மை அதிகமாகியுள்ளது.

இ-பாஸ் முறையின் அழிவுகரமான தாக்கத்தை நிவர்த்தி செய்ய முழுமையான தாக்க மதிப்பீடுகளை உள்ளூர் மக்கள் ஈடுபாட்டுடன் நடத்த வேண்டும். நிலையான தீர்வுகளை உருவாக்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களின் நல்வாழ்வைப் புறக்கணிக்கும் விதிவிலக்குக் கொள்கைகளால் இ-பாஸ் முறை தீங்கானது. இந்த நெருக்கடியைத் தவிர்க்க, இ-பாஸ் முறையை மறுபரிசீலனை செய்து, நிலையான, உள்ளடக்கிய தீர்வுகளை உருவாக்க வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x