வனவிலங்குகளால் பயிர்கள் சேதமாவதை தடுக்க சோலார் அதிர்வு மின் வேலி - புலிகள் காப்பகம் உறுதி


ஸ்ரீவில்லிபுத்தூர்: வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மலையடிவார பகுதிகளில் சோலார் அதிர்வு மின்வேலி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன்பாக வனவிலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் முத்தையா தலைமை விகித்தார். விளைநிலங்களில் பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாய நிலங்களில் மின் அதிர்வு வேலி அமைத்துத் தர வேண்டும். காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, நிபந்தனை இன்றி சுடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். வனவிலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மலையடிவாரப் பகுதியில் அகழிகள் வெட்டி பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜன், டிஎஸ்பி-யான ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மலையடிவார பகுதியில் கூடுதல் களப்பணியாளர்களை நியமித்து கண்காணிக்கப்படும். யானை நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலை அடிவாரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள விவசாய நிலங்களில் சோலார் அதிர்வு மின்வேலி அமைக்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என துணை இயக்குநர் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இப்போராட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி கிராமங்களான சிங்கம்மாள்புரம், மம்சாபுரம் வாழைகுளம், திருவண்ணாமலை வெங்கடேசபுரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

x