சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி கண்காட்சியில் ரூ.36 லட்சத்துக்கு விற்பனை!


சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சுய உதவி குழுக்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியில் ரூ.36 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனையாகி உள்ளன.

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கடந்த செப்.21ல் தொடங்கியுள்ளது. அக்.6ம் தேதியுடன் முடிவுக்கு வந்த இக்கண்காட்சி தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 48 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பல்வேறு உற்பத்தி பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. 2 வாரம் நடைபெற்ற கண்காட்சியில், தயாரிப்பு பொருட்களுக்கு வார இறுதி நாட்களில் 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடிகளும் வழங்கப்பட்டன.

அந்த வகையில் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியில் மொத்தம் ரூ.36 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனையாகி உள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x