கடலூர் - குறிஞ்சிப்பாடி அருகே தொகுப்பு வீடு இடிந்து தம்பதி படுகாயம்


கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர்குப்பத்தில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து கணவன், மனைவி 2 பேரும் காயமடைந்தனர். 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாய தொழிலாளி. இவர் அதே பகுதியில் தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று (அக்.6) ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி திவ்யா 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென அவர்களின் கொகுப்பு வீடு இடிந்து விழந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக, கணவன் மனைவி இரண்டு பலத்தக் காயத்துடன் உயிர்த் தப்பினார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கி இருந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடு அரசால் கட்டி கொடுக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் இதேபோல் அரசு தொகுப்பு வீட்டில் வசிக்கும் மக்கள் நம்முடைய வீடும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து புதிய அரசு தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

x