தமிழிசையுடனான வார்த்தை போர்: காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் - திருமாவளவன் விளக்கம்


சென்னை: முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசியது அவரைக் காயப்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘‘மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர் (திருமாவளவன்) காந்தியை தவிர்த்துவிட்டு காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார். மது ஒழிப்பை வலியுறுத்த முடியவில்லையே என்ற குற்றஉணர்வு காரணமா என்று தெரியவில்லை’’ என முன்னாள் ஆளுநர் தமிழிசைதெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, விசிகவின் மாநாட்டில் திருமாவளவன் பேசும்போது, "காந்தியின் கொள்கைக்கு நான் எதிரானவன் அதாவது நாள்தோறும் மது அருந்துவேன் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சொல்வதாகத் தெரிகிறது. அவர் குடிக்க மாட்டார் என நம்புகிறேன். அவரைப்போல் எனக்கும் அந்த பழக்கம் கிடையாது" என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தலைவர்கள் பேசியது சர்ச்சையான நிலையில் இரு தரப்பிலும் மன்னிப்பு கேட்கவலியுறுத்தி கட்சியினர் சார்பில்அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், ‘‘மது ஒழிப்புக்காக போராடிய காந்தி பிறந்தநாளில் மாநாடு நடத்தினோம். அவரது சிலைக்கு மரியாதை செலுத்த சென்றபோது, ஆளுநர் வந்த பிறகுதான் அனுமதிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மாநாட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் காத்திருக்க முடியவில்லை.

மறைமுகமாக... எனக்கு ஏதோ ஈடுபாடு இருப்பதாக மறைமுகமாக சொல்ல வந்தார். எனவே, உங்களைப் போல்தான் நானும் என்று சொன்னேன். என்னை காயப்படுத்தும் வகையில், பொதுமக்களிடையே திருமாவளவனுக்கு மது ஒழிப்பு கொள்கையில் முரண்பாடு இருப்பதாகச் சொன்னதால் நான் பதிலளித்தேன். இது அவரை காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’’ என்றார்.

x